Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முக்கிய நிர்வாகி விலகல்: என்ன கூறுகிறது மக்கள் நீதி மய்யம்?

மார்ச் 18, 2019 12:35

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமாக கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல் நியமிக்கப்பட்டார். 

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை நிறுத்தும் நேர்காணலும் பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.  

வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு அவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார். 

சென்னை பிரஸ் கிளப்பில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சி.கே.குமரவேல் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்திக்க முடியவில்லை. புதியவர்களால் கட்சி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதே தன்னை கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் சமூக வலைத்தளங்களில் முன்னிறுத்திக் கொண்டார். 

இதுதொடர்பாக அவர் கட்சி தலைமையிடம் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் குமரவேலின் ராஜினாமா ஏற்கப்பட்டது என அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்